Friday, January 28, 2011

கதவைத் திறந்து தரிசனம் தருவாய் கிருஷ்ணா!


உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில். காலை வேளை பூஜைகள் முடிந்து பாலகிருஷ்ணன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறான். ஒரு கையில் மத்து, இன்னொரு கையில் புல்லாங்குழலுடன், நாளொரு அர்ச்சனையும் பொழுதொரு அலங்காரமுமாய் இருக்கும் ச்சின்ன கிருஷ்ணன் இதழோரம் புன்னகைத்துக் கொண்டு தன்னை காண வருவோரை பார்த்தவாறு நின்றிருக்கிறான்.


அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதே அகிலம் மதுரம்

மதுரா நகரின் தலைவனே, கண்ணனே, உன் உதடுகள், முகம், கண்கள், புன்னகை, இதயம், நடை ஆகிய அனைத்தும் மிக இனிமையாக இருக்கின்றது.


குழந்தைகள் என்றாலே ஆச்சரியம்தான். அதுவும் அந்த பகவானே குழந்தையாய், குறும்பு சிரிப்போடு நின்றிருக்கையில், பக்தர்களுக்கு சன்னிதியை விட்டு விலகவும் மனம் வருமோ? கோயிலுக்கு வருவோரும் திரும்பிச் செல்ல மனமில்லாமல் அவனழகில் மனதை பறி கொடுத்தவாறு நின்றிருக்கிறார்கள்.

அப்போது கோயிலுக்கு பின்புறம் ஏதோ சத்தம். யாரோ கனகதாஸராம். கிருஷ்ணனை தரிசிக்க வந்திருக்கிறாராம். ஆனால், அவர் இடையர் குலமாகையால் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார். பக்த கனகதாஸர் மிகவும் வருத்தமுற்று, கோயிலுக்குள் செல்ல வேண்டி கிருஷ்ணனை துதித்தவாறு உள்ளார்.

ஆமா, இந்த கனகதாஸர் என்பவர் யார்? அதை முதலில் பார்ப்போம்.

**


த்வைத சித்தாந்தத்தை நிறுவிய மத்வரின் வழிவந்த ஸ்ரீ வாதிராஜர் மற்றும் ஸ்ரீ வியாஸராயர் வாழ்ந்த காலத்தில் [16ம் நூற்றாண்டு] வாழ்ந்து, அந்த பரம்பொருள் மேல் பற்பல பாடல்கள் இயற்றி, பக்திமணம் பரப்பியவர்தான் ஸ்ரீ கனகதாஸர். காகிநெலெ என்னும் ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு வந்த ஸ்ரீ கனகதாஸர் எண்ணற்ற பாடல்களையும், புத்தகங்களையும் நமக்கு அளித்துள்ளார். தன் எல்லா பாடல்களிலும் கடைசி வரியாக தன் இஷ்ட தெய்வமாகிய ‘காகிநெலெ ஆதிகேசவ’ என்னும் நாமத்தை பாடி அனைத்தையும் அந்த ஆதிகேசவனுக்கு அர்ப்பணம் செய்தவர். ஸ்ரீ புரந்தரதாஸரைப் போலவே இவரது பாடல்கள் அனைத்தும் கன்னடத்தில் அமைந்துள்ளன.


தன் குரு ஸ்ரீ வியாஸராயரின் விருப்பப்படி, கிருஷ்ணனை தரிசிக்கும் வண்ணம் உடுப்பி வந்திருக்கிறார். அப்போதுதான் மேற்சொன்ன சம்பவம்.

**

கோயிலுக்குள் அனுமதி கிடையாது, கிருஷ்ணன் வெளியே வரும்போது பார்த்துக்கொள் என்று சொன்ன அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல், ஸ்ரீ கனகதாஸர் கிருஷ்ணனை வேண்டி பாட ஆரம்பிக்கிறார்.

பாகிலனு தெரது சேவெயனு கொடு ஹரியே
கூகிதரு த்வனி கேளலில்லவே நரஹரியே (பாகிலனு)

உன் திருக்கதவைத் திறந்து தரிசனம் தருவாய் ஹரியே
நான் கூப்பிடுவது உன் காதில் விழவில்லையா, நரஹரியே...

பரமபததொளகே விஷதரண தல்பதல்லி நீ
ஸ்ரீ சஹித க்‌ஷீரவாரிதியொளிரலு
கரிராஜ கஷ்டதல்லி ஆதிமூலாயெந்து
கரெயலாக்‌ஷண பந்து ஒதகிதயோ நரஹரியே (பாகிலனு)

பரமபதத்தில் (வைகுண்டத்தில்) ஆதிசேஷன் மேல்
இலக்குமியுடன் நீ அமர்ந்திருக்கையில்
கஷ்டத்தில் இருந்த கஜேந்திரன் ஆதிமூலா என்று
கூப்பிட்ட அந்த நொடியில் வந்து காப்பாற்றிய நரஹரியே (பாகிலனு)

கடுகோபதிம் களனு கட்கவனெ பிடிது
நின்னொடெய எல்லிஹனெந்து நுடியே
த்ருட பகுதியல்லி சிசுவு பிடதே நின்னனு பஜிஸே
சடகரதி ஸ்தம்பதிந்தொடதே நரஹரியே (பாகிலனு)


கடும்கோபத்தில் இருந்த மன்னன் (இரண்யகசிபு) தன் வாளை எடுத்து
உன் கடவுள் எங்கே என்று வினவ
உன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த சிறுவன் (பிரகலாதன்) உன்னை வணங்கி வழிபடும்போது
அந்த தூணை உடைத்து வெளிவந்து அவனை ரட்சித்த நரஹரியே (பாகிலனு)

யமசுதன ராணிகே அக்‌ஷயவசனவானித்தே
சமயதல்லி அஜாமிளன பொரெதே
சமயாசமயவுண்டே பக்தவத்சல நினகே
கமலாக்‌ஷ காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

யமதர்மனின் மகனாகிய தர்மனின் மனைவிக்கு (த்ரௌபதி) முடிவில்லாத ஆடையை கொடுத்தாய்
தன் கடைசி காலத்தில் ‘நாராயணா’ என்றழைத்த அஜாமிளனுக்கும் அபயமளித்தாய்
உன் பக்தர்கள் கஷ்டப்படும் சமயத்திலெல்லாம் தவறாது வந்து அவர்களை
காப்பாற்றிய பக்தவத்ஸலனே
காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

**

இப்படி ஸ்ரீ கனகதாஸர் தன் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அந்த கண்ணனே ஆயர்குலத்தில் உதித்தவனாயிற்றே, அவன் தன் தாஸனாகிய கனகதாஸருக்கு தரிசனம் கொடுக்காமல் இருப்பானா? தன் பக்தன் உள்ளே வரமுடியாவிட்டால் என்ன, நானே அவனை நோக்கிப் போவேன் என்று சொல்லி, அதுவரை கிழக்கு நோக்கி நின்றிருந்த கண்ணன், நம் கனகதாஸருக்காக மேற்கு நோக்கி திரும்பினான். அப்படியும் தாஸருக்கு தரிசனம் எப்படி கிட்டும்? நடுவில் சுவர்கள் உள்ளனவே? படார்.. படார். சுவர்கள் உடைந்தன. தடைகள் நீங்கின. தாஸருக்கு அற்புதமான தரிசனத்தை வழங்கினான் கிருஷ்ணன்.

தாஸருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கண்கள் புஷ்பவாரி பொழிந்தன. கிருஷ்ணா கிருஷ்ணா என்ற கோஷங்கள் விண்ணை முட்டின. தன் பக்தனின் மகிமையை உலகுக்கு உணர்த்தினான் அந்த பக்தவத்சலன்.

அந்த சுவர் இருந்த இடத்தில் ’கனகன கிடுக்கி’ - கனகனின் ஜன்னல் என்று அழைக்கப்படும் ஒரு ஜன்னல் வைக்கப்பட்டு அதன் வழியே மட்டும் பக்தர்கள் அனைவரும் தன்னை காணவேண்டுமென்று சொன்னான் கண்ணன். அதேபோல் இன்றளவும் ஒரு சிறிய ஜன்னல் மூலமாகவே கண்ணனை தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.

**


‘கனகதாஸர்’ என்ற திரைப்படத்தில் ராஜ்குமார் நடித்து P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியுள்ள இதே பாடல் இதோ.




**

மேற்கண்ட காணொளியில் ’ஜன்னல்’ சரியா தெரியலியேன்னு கேட்பவர்களுக்கு, இன்னொரு பாடல் காணொளி. ‘இந்து எனகே கோவிந்தா’ என்ற இந்த பாடலின் விவரம் இன்னொரு இடுகையில் வரும். இங்கே போட்டிருப்பது அந்த ஜன்னல் வழியே கிருஷ்ணனை எப்படி பார்ப்பது என்று காட்ட மட்டுமே.



**

பக்தர்கள் வேண்டுகோளை பக்தவத்சலன் நிறைவேற்றுவான் என்று காட்டிய கனகதாஸரின் பிற பாடல்களை அடுத்துவரும் இடுகைகளில் பார்க்கலாம்.

**

Wednesday, January 26, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!


ஒரு கும்பல் நிறைந்த கடைத்தெருவில் ஒரு சிறுமி தன் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். அப்போ அப்பா சொன்னார் - என் கையை கெட்டியா பிடிச்சிக்கோம்மா. எங்கேயாவது தொலைஞ்சிடப் போறே. அதற்கு அந்த சிறுமி சொன்னது - என்னை உங்க கையை பிடிக்க சொல்லாதீங்கப்பா. நான் விட்டாலும் விட்டுடுவேன். நீங்க என்னை பிடிச்சிக்கோங்க. நீங்க என்(னை) கைவிட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதனால் நான் தொலைந்து போகவும் வாய்ப்பில்லை.

இதே கருத்தைத்தான் புரந்தரதாஸரும் இந்த பாடலில் சொல்கிறார். நாம் கடவுளை வணங்கி, அடிபணிந்து, அவன் தாஸனாக மாறுவதைவிட, அந்த பெருமாளே நம்மை தாஸனாக
ஏற்றுக்கொண்டுவிட்டால், அதைவிட பெரிய பாக்கியம் நமக்கு ஏது? அப்படி தாஸனாகி விட்டால், அந்த கிருஷ்ணனே சொன்னதுபோல், ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ - தன்னை சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும் அவர் காப்பாற்றுவார்.


சரி, அது என்ன பாட்டு?

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)

Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)

கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)

எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)

காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

**


முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

Total Surrender என்று சொல்வதைப் போல் தன்னை முழுமையாக அந்த புரந்தரவிட்டலனிடம் அர்ப்பணித்து, தன்னை ரட்சிக்குமாறு வேண்டி நிற்கும் தாஸரின் பக்தியை அப்படியே உள்வாங்கி நம்ம எம்.எஸ்.அம்மா பாடுவதை பார்த்து மகிழுங்க.




**
புரந்தரதாஸரின் தினம் அடுத்த வாரம் 2/2/2011 (புஷ்ய மாதம் அமாவாசையன்று) வருகிறது. அந்த நன்னாளில் புரந்தரவிட்டலனின் பேர்பாடி நாமும் அவனருள் பெறுவோமாக!

**