Thursday, February 13, 2014

சொல்வன்மை அல்லது நாக்கை அடக்குதல்



ஐம்புலன்களை அடக்குதல் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றை கட்டுப்படுத்தி, வென்றிட வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்று பல சான்றோர்கள் கூறியுள்ளனர். தாசரும் இந்தப் பாடலில் ஐம்புலன்களில் ஒன்றான நாக்கை கட்டுப்படுத்தி எப்பொழுதும் அந்த நாராயணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்.

அடுத்தவரை திட்டக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, காலையில் எழுந்தவுடன் ஸ்ரீராமனின் பெயரைச் சொல்ல வேண்டும் என்று வரிசையாக தாசர் நாக்கிற்கு புத்திமதி சொல்வதைக் கேட்டு ரசிக்கவும்.

***

ஆச்சாரவில்லத நாலிகே 
நின்ன நீச புத்திய பிடு நாலிகே
விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே
சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே
உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே
(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக
வெளியில் வருகிறாயே நாக்கே

ப்ராத: காலதொள் எத்து நாலிகே
ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே
பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன
சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே
ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே
அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)
எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

சாடி ஹேளலு பேடா நாலிகே
நின்ன பேடிகொம்பேனு நாலிகே
ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ
பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே
உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே
இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை
பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே
நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே
வரத புரந்தர விட்டலராயன
சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே
நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே
வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்
பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

***

எஸ்.ஜானகி அவர்கள் பாடியது : (ஒரு திரைப்படத்தில் வந்த வெர்ஷன்):

http://www.youtube.com/watch?v=Qx84mzkYMuM

வித்யாபூஷணர் பாடியது:
(இதைக் கேட்பதற்கு RealPlayer தேவைப்படும்).

http://www.kannadaaudio.com/Songs/Devotional/home/HaridasaNamana.php

***

Monday, February 10, 2014

கோவிந்தன் - எவ்வளவு அழகான பெயர்!



கோவிந்தன் - கோ (Go) என்ற சொல்லுக்கு புவி, பசு, பேச்சு & வேதம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. இந்த உலகத்தையும், அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுபவன்; கோகுலத்தில் இருந்த பசுக்களை காப்பாற்றியவன்; அவனில்லாது யாருடைய தொண்டையிலிருந்தும் பேச்சு வரவே வராது; அனைத்து வேதங்களும் யாரைக் குறித்து எழுதப்பட்டனவோ, அவன் ; - இதெல்லாம் யாருன்னு கேட்டால் - கோவிந்தன், அந்தப் பெயரை சொல்லச் சொல்ல ஆனந்தம்.

இதையே குறிப்பிட்டு பாடப்பட்டுள்ள இந்தப் பாடல், மிகவும் சிறியது; ஆனால் கோவிந்தா என்ற பெயரைப் போல் மிகவும் அழகான பாடல்; மிகவும் புகழ் பெற்றதும் ஆகும்.

***

கோவிந்தா நின்ன நாமவே சந்தா
கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு
கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா
நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா
மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா
பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா
பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன
ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா
(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்
பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை
(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

***

திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் குரலில் இந்தப் பாடல்:
http://www.youtube.com/watch?v=wUTJoX_AS8E

உன்னிகிருஷ்ணன் பாடியது:
http://www.youtube.com/watch?v=kDvYP6zgS-U

***

Wednesday, February 5, 2014

நீ நிஜமாகவே கருணையுள்ளவன்தானா?


பற்பல பாடல்களில் சொல்லப்பட்ட அதே கருத்துகள்தான். சர்வோத்தமனிடம் தாசர் என்ன வேண்டுவார்? இம்மையில் எப்பொழுதும் நின் கருணை; மறுமை வேண்டாம். இவ்வளவுதான். இதை ‘வைராக்கிய’ வகைப் பாடல் என்பார்கள். இந்த வகையில் புரந்தரதாசர், கனகதாசர் முதலானோர் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இதில் பரந்தாமனை திட்டிப் பாடுவது இன்னொரு வகை. அதை ‘நிந்தா ஸ்துதி’ என்பர். இந்த பாடல் இவ்விரு வகையிலும் வருமாறு உள்ளது.

முன்னர் இறைவன் பல அவதாரங்களில் தன் பக்தர்களை எப்படி காப்பாற்றினான், என்னை ஏன் இந்தப் பிறவியில் இன்னும் விட்டிருக்கிறாய்? நீ கருணையுள்ளவன்தானா என்று எனக்கு நம்பிக்கை போய்விடும் போலிருக்கிறதே என்றெல்லாம் புரந்தரதாசர் பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை பார்ப்போம்.

***

கருணாகர நீனெம்புவது யாதகோ
பரவச வில்ல எனகே
பரி பரியலி நர ஜெம்னவனித்து
திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)

கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
(நீ கருணாகரன் என்ற) நம்பிக்கையில்லை எனக்கு
மறுபடி மறுபடி எனக்கு மானிட ஜென்மத்தைத் தந்து
திரும்பத் திரும்ப என் மனம் கஷ்டப்படுவதைக் காணும் உன்னை (கருணாகர)

கரி த்ருவ பலி பாஞ்சாலி அஹல்யெயா
பொரெதெவா நீனந்தே
அரிது விசாரிசி நோடல தெல்லவு
பரி பரி கந்தேகளெந்தே (கருணாகர)

யானை (கஜேந்திரன்), துருவன், பலி மகாராஜா, பாஞ்சாலி, அகல்யை
(ஆகிய எல்லாரையும்) காப்பாற்றியவன் நீயே என்கிறார்கள்
தானாகவும், கேட்டு தெரிந்துகொண்ட இது (மேற்கண்ட) எல்லாமும்
மறுபடி மறுபடி (கற்பனைக்) கதைகளாகவே தோன்றுகிறதே? (கருணாகர)

கருணாகர நீனாதரே ஈகலே
கரபிடிதென்னனு ஹரி காயோ
சரசிஜாக்‌ஷனே அரச நீனாதரே
துரிதகளென்னனு பீடிபதுண்டே? (கருணாகர)

நீ கருணையுள்ளனவன் என்றால் இப்போதே
என் கைகளைப் பிடித்து என்னை காப்பாயாக ஹரியே
தாமரைக் கண்ணனே, நீ (அனைவருக்கும்) அரசன் என்றால்
கஷ்டங்கள் என்னை பீடிப்பது ஏன்? (கருணாகர)

மரண காலதல்லி அஜாமிள கொலிதே
கருடத்வஜனெம்ப நாமதிந்தா
வரபிருதுகளு உளிய பேகாதரே
த்வரிததி காயோ, புரந்தர விட்டலா (கருணாகர)

மரணத் தருவாயில் (இருந்த) அஜாமிளனுக்கு கருணை காட்டினாய்
கருடத்வஜன் (வாகனம்) என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
(உனக்கு இருக்கும்) நல்ல பெயர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால்
உடனடியாக என்னைக் காப்பாற்றுவாய், புரந்தர விட்டலனே (கருணாகர)

***

பீமண்ணர் பாடிய இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=uwF3g_A2EJ4

வித்யாபூஷணர் பாடியதை இங்கே கேட்கலாம்.

Monday, February 3, 2014

ஸ்ரீமஹாலக்‌ஷ்மி யாரை திருமணம் செய்து கொள்வார்?


பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். பாற்கடலை கடைய கடைய, அதிலிருந்து முதலாவதாக வந்தவர் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி. இவர் ஸ்ரீமன் நாராயணனுக்கே உரியவர் ஆகையால், உடனே அவரிடம் போய்த் தஞ்சமானார்.

இந்த இடத்தில், ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி தோன்றியவுடன், புரந்தர தாசர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்பது போல் இந்தப் பாடல் உள்ளது. அதாவது, நீ யாரைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்? என தாசர் கேட்பதாக உள்ளது. பல தலங்களில் இருக்கும் பரந்தாமனை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடலை பார்ப்போம்.

***

க்‌ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரிகே வதுவாகுவே - நீனு யாரிகே வதுவாகுவே

பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரை திருமணம் செய்துகொள்வாய் - நீயே..

சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ
பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ
சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ
உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)

(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா
பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா
நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா
காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)

செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ
கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ
இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ
நலினாக்‌ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)

அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா
உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா
அல்லது பாண்டுரங்க விட்டலனையா
தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)

மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ
சுலப தேவரு புருஷோத்தமனிகோ
பலதாயக நித்ய மங்கள தாயககோ
செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)

மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா
யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா
வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா
வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)

வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ
ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ
சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ
சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)

இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா
அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா
நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா
ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)

சரணாகத ரக்‌ஷக சாரங்கபாணிகோ
வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ
குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ
ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)

சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா
வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா
’குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா
நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)

***

திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய இந்த பாடலின் ஒலித்துண்டை கீழ்க்கண்ட தளத்தில் ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழவும்.


Saturday, February 1, 2014

எமன் எங்கேயிருக்காரு?


பெரும்பாலும் புரந்தரதாசரின் பாடல்களுக்கு மொழிபெயர்ப்பே தேவையில்லை. சிறிது கன்னடம் தெரிந்திருந்தாலே புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். இன்றைய பாடலும் அப்படிதான். ராமன் & கிருஷ்ணன் - இவர்களை நம்பியவர்களுக்கு எப்படி உதவி கிடைத்தது? இவர்களை நம்பாதவர்கள் / சாராதவர்கள் என்ன ஆனார்கள்? இவற்றை விளக்கும் பாடலே இது.

சொந்த சகோதரனை விட்டு ராமனிடம் சரணாகதி பெற்ற விபீஷணன்; உனது படைகள் வேண்டாம், நீ மட்டும் என்னுடன் இருந்தாலே போதும் என்ற அர்ஜுனன்; கண்டிப்பாக இந்த தூணில் நாராயணன் இருப்பான் என்று நம்பிக்கையில் சொன்ன பிரகலாதன்; கிருஷ்ணனை நம்பிய உக்ரசேனர் - இவர்களை எப்படி இறைவன் ஆட்கொண்டு காப்பாற்றினான் என்று இந்த பாடலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாறாக ராவணன், துரியோதனன், ஹிரண்யகசிபு, கம்சன் - இவர்களுக்கு என்ன ஆனது? - அந்த பகவானே எமன் ஆனான் என்று கூறுகிறார் தாசர்.



யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா
யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்
ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்

நம்பித விபீஷணகே ராமனாதா
நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)
நம்பித அர்ஜுனகே மித்ரனாதா
நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)

(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்
நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)
நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்
நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா
நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)
நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா
நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)

நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்
நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)
நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்
நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா
கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)

ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்
சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)

***

சிக்கில் குருசரணின் இந்த குரலில் இந்த பாடல்:

http://www.youtube.com/watch?v=bWRdG4F4_qc

***

Thursday, January 30, 2014

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு!!



கற்கண்டை விட இனிமையானது எது? அந்த கிருஷ்ணனின் நாமம்தான். அதை சொல்லுவதால் நாக்கில், மனதில் எவ்வளவு இனிமை பரவுகிறது என்று சொல்கிறார் புரந்தர தாசர். 

இந்தப் பாடல் முழுக்க கற்கண்டையும், ஸ்ரீ கிருஷ்ணனின் பெயரையும் ஒப்பிட்டு, பின்னதின் இனிமையை அழகாக விவரிக்கிறார். 

கற்கண்டுன்னா எறும்பு வரும், நிறைய இருந்தா திருட்டு போயிடும், சந்தையில் வாங்கலாம், விற்கலாம், வண்டி கட்டி எடுத்துப் போயிடலாம் - ஆனால், கற்கண்டை விட மிகமிக இனிமையானதாக இருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணனின் நாமத்தை மேற்கண்ட எதாலும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். 

இன்று புரந்தர தாசரின் புண்ய தினம். அடுத்த சீசனை இந்த அருமையான பாட்டுடன் துவக்குவோம். புரந்தர விட்டலா.... வாங்க கற்கண்டு சாப்பிடலாம்...

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு
கல்லு சக்கரே கொள்ளீரோ
கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு
புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு - நீங்க எல்லோரும்
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு
கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)
மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா
ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா
எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா
உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா... (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது
எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது
எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது
உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா
எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா
கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா
பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது
(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது
கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது
பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்... (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா
சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா
சந்தத பக்தர நாலகே சவிகொம்ப
காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது
சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது
எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்
புரந்தர விட்டலா என்னும் நாமமான ... (கற்கண்டு)

***

இந்தப் பாடலை மிக அருமையாக உணர்ந்து பாடும் வித்யாபூஷணர்.

http://www.youtube.com/watch?v=NGzXqZcJzYk

***

Monday, March 11, 2013

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



கேட்டதில் பிடித்தது:
ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக்கு நாராயணன், லட்சுமி நாராயணன், நரசிம்மன் என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். அதை அப்படியே கூப்பிட்டால், ராம நாமத்தைப் போல பலனைப் பெறலாம். ஆனால் கூப்பிடுவதோ, முறையே, நாணா, லச்சு, நர்ஸு என்று கூப்பிடுகிறார்கள். அதுவே ராமன் என்று பெயர் வைத்தால், அதை சுருக்கினாலும் ராம் என்றே ஆகும். ஆகவே, அனைத்து வகையிலும் ராம நாமம் சுலபமானது, சிறந்தது.

***

பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.

இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?

அதற்கு சிவபெருமான் சொன்னது:

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.

***

எந்தவொரு விஷயத்தையும் பெரியவர்கள் சொன்னால், ‘அவரே சொல்லிட்டார்’னு சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதைப் போல் தாசரும், ராம நாமத்தின் மகிமையை சொல்லும்போது, பரமசிவன் தன் மனதுக்கு இனியவளிடம் சொன்ன மந்திரம் என்று இதன் பெருமையை எடுத்துரைக்கிறார். நாம் சாதாரணமாக அது இது என்று பேசுவதைப் போல், அந்த மந்திரம், இந்த மந்திரம்னு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காமல், ‘இந்த’ மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார். பாடலையும் அதன் பொருளையும் பாருங்கள். அவ்வப்போது ‘ராம ராம’ என்று சொல்லுங்கள்.

***

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா
ராம மந்த்ரவ ஜபிஸோ
ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா
சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே
அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்
அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர
சல பீதியொளு உச்சரிப மந்த்ர
ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர
சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்
சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்
எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்
சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர
சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர
துரித கானனகிது தாவானல மந்த்ர
பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்
அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்
பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்
உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு 
சானுராகதி நித்ய சேவிப மந்த்ர
பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர
தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)
காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்
சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்
(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

***


043/365
***