Showing posts with label ராமன். Show all posts
Showing posts with label ராமன். Show all posts

Saturday, February 1, 2014

எமன் எங்கேயிருக்காரு?


பெரும்பாலும் புரந்தரதாசரின் பாடல்களுக்கு மொழிபெயர்ப்பே தேவையில்லை. சிறிது கன்னடம் தெரிந்திருந்தாலே புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். இன்றைய பாடலும் அப்படிதான். ராமன் & கிருஷ்ணன் - இவர்களை நம்பியவர்களுக்கு எப்படி உதவி கிடைத்தது? இவர்களை நம்பாதவர்கள் / சாராதவர்கள் என்ன ஆனார்கள்? இவற்றை விளக்கும் பாடலே இது.

சொந்த சகோதரனை விட்டு ராமனிடம் சரணாகதி பெற்ற விபீஷணன்; உனது படைகள் வேண்டாம், நீ மட்டும் என்னுடன் இருந்தாலே போதும் என்ற அர்ஜுனன்; கண்டிப்பாக இந்த தூணில் நாராயணன் இருப்பான் என்று நம்பிக்கையில் சொன்ன பிரகலாதன்; கிருஷ்ணனை நம்பிய உக்ரசேனர் - இவர்களை எப்படி இறைவன் ஆட்கொண்டு காப்பாற்றினான் என்று இந்த பாடலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாறாக ராவணன், துரியோதனன், ஹிரண்யகசிபு, கம்சன் - இவர்களுக்கு என்ன ஆனது? - அந்த பகவானே எமன் ஆனான் என்று கூறுகிறார் தாசர்.



யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா
யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்
ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்

நம்பித விபீஷணகே ராமனாதா
நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)
நம்பித அர்ஜுனகே மித்ரனாதா
நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)

(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்
நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)
நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்
நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா
நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)
நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா
நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)

நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்
நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)
நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்
நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா
கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)

ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்
சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)

***

சிக்கில் குருசரணின் இந்த குரலில் இந்த பாடல்:

http://www.youtube.com/watch?v=bWRdG4F4_qc

***

Monday, March 11, 2013

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



கேட்டதில் பிடித்தது:
ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக்கு நாராயணன், லட்சுமி நாராயணன், நரசிம்மன் என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். அதை அப்படியே கூப்பிட்டால், ராம நாமத்தைப் போல பலனைப் பெறலாம். ஆனால் கூப்பிடுவதோ, முறையே, நாணா, லச்சு, நர்ஸு என்று கூப்பிடுகிறார்கள். அதுவே ராமன் என்று பெயர் வைத்தால், அதை சுருக்கினாலும் ராம் என்றே ஆகும். ஆகவே, அனைத்து வகையிலும் ராம நாமம் சுலபமானது, சிறந்தது.

***

பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.

இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?

அதற்கு சிவபெருமான் சொன்னது:

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.

***

எந்தவொரு விஷயத்தையும் பெரியவர்கள் சொன்னால், ‘அவரே சொல்லிட்டார்’னு சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதைப் போல் தாசரும், ராம நாமத்தின் மகிமையை சொல்லும்போது, பரமசிவன் தன் மனதுக்கு இனியவளிடம் சொன்ன மந்திரம் என்று இதன் பெருமையை எடுத்துரைக்கிறார். நாம் சாதாரணமாக அது இது என்று பேசுவதைப் போல், அந்த மந்திரம், இந்த மந்திரம்னு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காமல், ‘இந்த’ மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார். பாடலையும் அதன் பொருளையும் பாருங்கள். அவ்வப்போது ‘ராம ராம’ என்று சொல்லுங்கள்.

***

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா
ராம மந்த்ரவ ஜபிஸோ
ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா
சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே
அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்
அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர
சல பீதியொளு உச்சரிப மந்த்ர
ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர
சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்
சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்
எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்
சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர
சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர
துரித கானனகிது தாவானல மந்த்ர
பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்
அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்
பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்
உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு 
சானுராகதி நித்ய சேவிப மந்த்ர
பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர
தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)
காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்
சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்
(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

***


043/365
***


Thursday, February 28, 2013

ராம நாமம் என்னும் பாயசம்.


பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறும். அது சாதாரண மக்களாகிய நமக்கு.

புரந்தரதாசருக்கு?

வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே. அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதாம்.

ராமா. கிருஷ்ணா. விட்டலா.

இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக் குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.

நாமும் சொல்லிப் பார்ப்போமா?

ராமா
கிருஷ்ணா
விட்டலா

இப்போ பாட்டு.

இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***சஜ்ஜிகே - கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே - சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

மேலே கூறிய பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.

அதாவது இப்படி:

கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்; இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து; புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது? மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.

***

ப்ரியா சகோதரிகள் அருமையாக பாடும் ராம நாம பாயசக்கே...


***

040/365

Sunday, April 10, 2011

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது,

எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது -

இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்?

டக்குன்னு சொல்லிடுவீங்க.

சிறுவனாக மாயைகளை காட்டுவதும்; பின்னாளில் (கீதையை உபதேசித்து) மாயைகளை நீக்குவதும் கிருஷ்ண அவதாரத்தில்தானே. இதைத்தான் நம்ம விசாகா ஹரி எப்படி அருமையா சொல்றாங்கன்னு ஒரு தடவை கேட்டுடுங்க.

http://www.youtube.com/watch?v=eHA9oKVxkFw

நிற்க.

இந்த மாயாஜாலங்களை கிருஷ்ண அவதாரத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்தாலும், ரொம்ப நாளைக்கு முன், ராமாவதாரத்திலேயே நமக்கு ஒரு ச்சின்ன முன்னோட்டம் கிடைத்து விடுகிறது.

அட, அது எப்படி?

அதுதான் இன்றைய பாடல். ஸ்ரீ புரந்தரதாசருடையது.

***

ராம ராவண யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திரஜித் மரணமடைந்த தருணத்திற்கு வருவோம். ராவணன் தன்னுடைய core சேனையை யுத்தத்துக்கு அனுப்புகிறான். இந்த சேனையில் இருக்கும் ஒவ்வொருவரும் ராவணன் அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள். இந்த சேனை நகர்ந்து வரும்போது தூசி பறந்து அந்த இடத்தையே மறைத்ததாம். ஈட்டிகளின் உரசல்கள் காட்டுத்தீ அளவுக்கு தீயை வளர்த்ததாம்.

எண்ணிக்கையில் மிகவும் அதிகமான இந்த ராவண சேனையைக் கண்டு, வானர சேனைகள் பயந்து ஓடின. சுக்ரீவன், நீலன், அங்கதன் ஆகியோர் வானர சேனையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. மெல்ல மெல்ல ராவண சேனை, வானரர்களை அழித்துக் கொண்டே வந்து, ராமனையும் நெருங்கியது.

தனியொருவனாக ராமன், மிகப்பெரிய ராவண சேனையை எப்படி எதிர்கொள்வான்? அவனால் முடியுமா, முடியாதா என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, ராமன் யுத்தத்தை துவக்குகிறான். ராமன் விட்ட அம்புகள் மழை போல் தொடர்ந்து சென்று ராவண சேனைகளை அழிக்க ஆரம்பித்தன. எப்போது அம்பை எடுக்கிறான், எப்போது வில்லில் தொடுக்கிறான், எப்போது அதை விடுவிக்கிறான் என்பதே தெரியாமல் மிகமிக வேகமாக யுத்தம் செய்கிறான் ராமன்.

ஆனாலும், ராவண சேனைகள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் வேறொரு உபாயம் செய்தே அவர்களை முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இப்போதுதான், மேலே சொன்ன அந்த 'முன்னோட்டம்' வருகிறது.

பூம்.




திடீரென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும், மற்றவர்களுக்கு ராமனைப் போலவே காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தால் ராமன். அங்கே ராமன். யாரைப் பார்த்தாலும் ராமனைப் போலவே தெரிகிறது. யுத்தகளத்தில் இடமே இல்லாமல், எல்லா இடத்திலும் ராமன். திடீரென்று எப்படி இவ்வளவு ராமன் வந்தான் என்று அனைவருக்கும் குழப்பம்.

ராவண சேனைகளுக்கு பயங்கர கோபம். ராமனாக தெரிபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். அதாவது தங்கள் சேனையிலிருப்பவர்களையே கொன்றனர். இப்படியே எதிரிகள் தங்களை தாங்களே கொன்று அழிய ஆரம்பித்தனர்.

இந்தப் பக்கம், வானரர்கள். ஒரே ஒரு ராமன் இருந்தாலே அவனுக்கு சேவைகள் செய்து மகிழ்பவர்கள். இப்போது பற்பல ராமன்கள். ஆனந்தம் தாங்கவில்லை அவர்களுக்கு. ஆடுகின்றனர். பாடுகின்றனர். தலைகால் புரியவில்லை. இப்படி அனைத்து ராவண சேனையும் அழிந்தபிறகு, ராமன் இந்த மாயையை நிறுத்தி, மறுபடி ஒருவனாக நின்றான். ராமாயணத்தில் வரும் இந்த யுத்தக் காட்சியை, ஸ்ரீ புரந்தரதாசர் அப்படியே தன எளிமையான கன்னடத்தில் பாடியிருக்கிறார்.





***

அல்லி நோடலு ராம இல்லி நோடலு ராம

எல்லெல்லி நோடிதரல்லி ஸ்ரீ ராம

அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன்

எங்கெங்கு பார்த்தாலும் அங்கு ஸ்ரீ ராமன்

ராவணன மூலபல கண்டு கபிசேனே

ஆவாகலே பெதரி ஓடிதவு

ஈவேளே நரனாகி இரபார தென்தெணிசி

தேவ ராமச்சந்திர ஜகவெல்ல தானாத (அல்லி)

ராவணனின் முக்கிய படையினரின் பலத்தைப் பார்த்த வானர சேனைகள் உடனடியாக அடித்துப் பிடித்து ஓடியது இனிமேல் (சாதாரண) மனிதனாக இருக்கக்கூடாது என்றெண்ணிய ராமன் உலகம் முழுக்க அவனே வியாபித்தான். (பற்பல அவதாரங்கள் எடுத்தான்).

அவனிகே இவ ராம இவனிகே அவ ராம

அவனியோள்ளுபரி ரூப உண்டே

லவ மாத்ரதி அசுர துருவலெல்லரு

அவரவர் ஹோடெதாடி ஹதராகி ஹோதரு (அல்லி)

அவனுக்கு இவன் ராமன் இவனுக்கு அவன் ராமன் உலகத்தில் ராமனைத் தவிர இன்னொரு ரூபமும் உண்டோ இது நடந்த உடனே, அசுரர்களின் பக்கத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வீழ ஆரம்பித்தனர்

ஹனுமதாதி சாது ஜனரு அப்பி கொண்டு

குணிகுனி தாடிதரு ஹருஷ திந்தா

க்ஷண தல்லி புரந்தர விட்டல ராயனு

கொனேகொனேயனு தானொப்பனாகி நிந்தா (அல்லி)


அனுமன் முதலாத வானர சேனைகள் (ஒருவரையொருவர்) கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்து குதித்து ஆடினர் சந்தோஷத்துடன் உடனே (ஒரு நிமிடத்தில்) புரந்தர விட்டலனான ஸ்ரீ ராமன் தன் அனைத்து ரூபங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவனாகி நின்றான்.


***


Dr.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தன் அருமையான குரலில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.




**



Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள் பாடியது.




***


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!


***