Showing posts with label கோபாலதாசர். Show all posts
Showing posts with label கோபாலதாசர். Show all posts

Thursday, January 15, 2015

காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..


காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..

* இன்றைய பாடலை எழுதியவர் கோபால தாசர். இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும்.
* இவர் வாழ்ந்த காலம் 1722 - 1762.
* இவர் மறைந்த தினம் சென்ற 13ம் தேதி (13/01/2015) அனுசரிக்கப்பட்டது.
* இவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் இங்கே மற்றும் இங்கே.
* மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கோபால தாசர், அதற்குள் இயற்றிய நூல்கள் மற்றும் கீர்த்தனைகள் எண்ணற்றவை.
* தாசர்களில் மிக முக்கியமானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் 4பேர். அவர்களில் ஒருவரான ஜகன்னாத தாசர், இவரது சீடராவார். தன் சீடன் மிகக் கொடுமையான நோயால் துயரப்படுவதைக் கண்ட கோபால தாசர், தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளை தானம் கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது.



இன்றைய பாடலைப் பற்றி:

ஏதோ ஒரு பிறப்பில் செய்த நல்ல செயலால் இப்போது மனிதனாக பிறந்துள்ளேன். ஆனால், உயிரோடிருக்கும் சிறிது காலத்தையும், வெட்டிப் பேச்சு, கெட்ட சகவாசம், அழியும் இந்த உடலை பேணிப் பாதுகாத்தல் - இதையே செய்து கழித்து விட்டேன். ஒரு நாளும் கோயிலுக்குப் போனதில்லை, சான்றோர் கூறும் நல்லுரைகளைக் கேட்டதில்லை, பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. இப்படி எதுவுமே செய்யாமல், கடைசி காலத்தில் எம தூதர்கள் வந்து, நீ என்ன நல்ல காரியங்கள் செய்தாய் என்று கேட்டால், சொல்வதற்கு எதுவுமே இல்லையே, கோபால விட்டலா - என்று முடிக்கிறார்.

Self-help புத்தகங்களில் நம்மிடம் உள்ள தவறுகள் என்னென்ன, எதைச் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றெல்லாம் விதவிதமாக பட்டியல் போட்டிருப்பாங்க. மொத்த புத்தகத்தையும் படித்து முடித்தபிறகு, அட, இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியுமே என்போம். அதைப் போலவே, தாசரின் இந்த பட்டியலும். மொத்தம் 5 பத்திகளில், நாம் செய்யாததையும், இனிமேல் செய்ய வேண்டியவற்றையும், அழகாக எடுத்துரைத்து, இடித்துரைக்கிறார்.

அதைக் கேட்டு, அதன்படி நடந்து கொள்ளவேண்டியது நம் பொறுப்பு.

***

ஹ்யாங்கே மாடலய்யா கிருஷ்ணா ஹோகுதித்தே ஆயுஷ்யா
மங்களாங்க பவபங்க பிடிசி நின்ன டிங்கரிகன மாடோ
அனங்கஜனகா (ஹ்யாங்கே)

எப்படி(என்ன) செய்வேன் கிருஷ்ணா, இந்தப் பிறவியின் நாட்கள் வேகமாக கழிகின்றனவே?
என்னை இந்த துயரக் கடலிலிருந்து விடுவித்து, உன் அடியனாக ஆக்குவாயாக (ஹ்யாங்கே)

யேசு ஜனுமத சுக்ருதத பலவோ தானு ஜனிசலாகி
பூசுர தேஹத ஜனுமவு எனகே சம்பவிசிதேயாகி
மோததீர்த்தமத சின்ஹிதனாகதே தோஷக்கே ஒளகாகி
லேஷ சாதனவா காணதே துஸ்ஸஹவாசதிந்தலே தினதின களெதே (ஹ்யாங்கே)

முந்தைய எந்தப் பிறவியில் செய்த நற்செயலோ, இந்தப் பிறவி கிடைத்தது;
பூலோகத்தில் இந்த உடல் / பிறவி எனக்கு கிடைத்துள்ளது
ஆனந்த தீர்த்தரின் மதத்தைப் பின்பற்றாமல், தோஷம் அடைந்து
எதையும் படிக்காமல், கூடா நட்பினைக் கொண்டு தினம்தினம் கழித்தேன் (ஹ்யாங்கே)

சசிமுக கனகத ஆஷேகே பெரெது வசுபதி நின்னடியா
ஹஸனாகி நின்ன நெனெயதே க்ருபெயா களிசதே கெட்டேனய்யா
நிஷிஹகலு ஸ்திரவெந்து தனுவனு போஷிசலாஷிசி ஜீயா
உசுரித நிலவோ சர்வகால நின்னொடெதன எம்புவோ பகேயனு அரியதே (ஹ்யாங்கே)

நிலவைப் போன்ற முகத்தையுடைய, தங்க மேனியுடைய லட்சுமியின் கணவனே, உன் திருவடியை
எப்போதும் உன்னை நினையாமல், உன் பெருமையைப் பேசாமல், கெட்டுப் போனேன்
இரவும் பகலும் எப்போதும் நிரந்தரம் என்றெண்ணி, இந்த உடலை பேணிப் பாதுகாப்பதில் நேரத்தை செலவிட்டேன்
(ஆனால்) இதெல்லாம் எப்போதும் உன்னுடையதே என்னும் உண்மையை அறியாமல் (ஹ்யாங்கே)

நெரே நம்பித பாவடிகளு எல்ல சரிது ஹோதவல்லா
மரளி ஈ பரி ஜெனுமவு பருவ பரவசே எந்து இல்லா
பரிபரி விஷயத ஆஷெயு எனகே பிரிது ஆயிதல்லா
ஹரியே ஜகதி நீனு ஒப்பனில்லதே பொரெவரின்ன ஆருரில்லா பல்லா (ஹ்யாங்கே)

எதையெல்லாம் இன்பம் கொடுக்கும் என்று எண்ணினேனோ (வீடு, செல்வம் etc), அவையெல்லாம் நிரந்தர இன்பத்தைக் கொடுக்காது என்று இப்போது புரிகிறது;
இந்தப் பிறவியின் இறுதியில் இவை எனக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
(இப்படி) பலப்பல விஷயங்களில் ஆசைப்பட்டதால், நான் ஒரு நிலையில் இல்லை;
ஹரியே, நீ ஒருவன்தான் இந்த உலகில் எனக்கு உதவி செய்யமுடியும், உன்னைப் போல் வேறு எவருமில்லை, உனக்கு ஒப்புமில்லை (ஹ்யாங்கே)

அவனியொளகே புண்ய க்‌ஷேத்ர சரிசுவ ஹவணிகே எனகில்லா
பவனாத்மக குரு மத்வ சாஸ்த்ரத ப்ரவசன கேளலில்லா
தவகதிந்த குரு ஹிரியர சேவிசி அவர ஒலிசலில்லா
ரவி நந்தன கேளிதர உத்தர கொடே விவர சரகு ஒந்தாதரில்லா (ஹ்யாங்கே)

உலகில் புனித யாத்திரை போவதற்கு எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை
அனுமனின் அவதாரமாகிய மத்வரின் சாஸ்திர உபன்யாசங்களை கேட்டதேயில்லை
எந்த குரு/ஆசிரியருக்கும் சேவை செய்து, அவர் ஆசிர்வாதங்களை பெற்றதில்லை
(இந்தப் பிறவியில் நீ என்ன செய்தாய் என்று சூரிய புத்திரன்) எமன் கேட்டால், சொல்வதற்கு என்னிடம் நல்ல விஷயங்களே இல்லை (ஹ்யாங்கே)

பாகவதரொடகூடி உபவாச ஜாகர ஒந்தின மாடலில்லா
ராகதி சுகமுனி பேள்த ஹரிகத சம்யோக வெம்போதில்லா
நீகுவந்த பவ பயவ பகுதி வைராக்ய வெம்போதில்லா
யோகிவந்த்ய கோபால விட்டலா தலேபாகி நின்னனெ பேடிகொம்பே (ஹ்யாங்கே)

சான்றோர்களுடன் உபவாசம், ஜாகர்ண** ஒரு நாளும் செய்ததில்லை
சுக முனிவர் (பரிக்‌ஷித்) ராஜனிடம் கூறிய பாகவதத்தின் சாரத்தை கேட்டதில்லை
சம்சார சாகரத்திலிருந்து என்னை விடுவிக்க உதவும் பக்தி & வைராக்கியம் எனக்கு இல்லை
கோபால விட்டலனே, உன்னை தலைவணங்கிக் வேண்டிக் கொள்கிறேன் (ஹ்யாங்கே)


**ஜாகர்ண = இரவு முழுவதும் விழித்திருந்து, இறைவனை வழிபடுதல்

***